பங்களா வீட்டில் பற்றிய தீ- தம்பதி பலி

 
பங்களா வீட்டில் பற்றிய தீ- தம்பதி பலி பங்களா வீட்டில் பற்றிய தீ- தம்பதி பலி

சென்னை வளசரவாக்கம் பகுதியில் பங்களா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி முதியவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் சௌத்ரி நகர் நான்காவது தெருவில் ஸ்ரீராம் (50) எனும் ஆடிட்டர் வசித்து வருகிறார். இவரது மனைவி சியாமளா (45) மற்றும் மகன் ஸ்ரவன் (20).  ஸ்ரீராமின் பெற்றோர் நடராஜன் (79) மற்றும் தங்கம். மூன்று தலங்கள் கொண்ட ஸ்ரீராமின் வீடு பெரும்பாலும் மரக்கட்டங்களால் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வீட்டிலிருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ வேகமாக பரவியதால் குடும்பத்தினர் அனைவரும் செய்வது அறியாது தவித்தனர். இதில் வீட்டில் இருந்த  ஸ்ரீராமின் மகன் ஸ்ரவன் (18) மற்றும் பணிப்பெண் சரஸ்வதி ஆகியோர் முதல் தளத்திலிருந்து குதித்து உயிர் பிழைத்தனர். இதில் பணிப்பெண்ணுக்கு இடுப்பு உடைந்தது. ஆனால் வீட்டில் இருந்த  முதியவர்களான நடராஜன் மற்றும் தங்கம் ஆகிய இருவரும் வெளியில் வர முடியாமல் முதல் தளத்தில் மாட்டிக் கொண்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமாபுரம் விருகம்பாக்கம் மற்றும் மதுரவாயல் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். ஒரு மணி நேரமாக போராடியும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்படாததால் கூடுதல்  தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. அதற்குள் வீடு முழுவதும் தீப்பரவி அனைத்து பொருள்களும் எரிந்து சேதம் அடைந்தன. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து உள்ளே சென்று தீயணைப்பு வீரர்கள் ஆய்வு செய்தபோது நடராஜன் மற்றும் தங்கம் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. அவர்களது உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.