பட்டாசு ஆலைகளில் தொடரும் வெடி விபத்துகள் - சசிகலா கண்டனம்

 
sasikala

பட்டாசுகளை சில்லறையாக விற்பனை செய்யும் இடங்களில் எல்லாம் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா?  என்று சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுத்தொடர்பாக சசிகலா தனது சமூகவலைத்தள பக்கத்தில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட ரெங்கபாளையம் ஊராட்சியில் தனியார் பட்டாசு ஆலையில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பெண்கள் உள்ளிட்ட 13 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அதேபோன்று சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த மற்றொரு தனியார் பட்டாசு தொழிற்சாலையில் மூலப்பொருள் கலக்கும் அறையில் வெடிவிபத்து ஏற்பட்டு வேம்பு என்ற தொழிலாளியும் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த இருவேறு வெடி விபத்துகளிலும் உயிரிழந்த மகாதேவி, பஞ்சவர்ணம், தமிழ்செல்வி, முத்துலட்சுமி, முனீசுவரி, தங்கமலை, அனிதா, பாக்கியலட்சுமி, குருவம்மாள், லட்சுமி, இந்திரா, செல்லம்மாள், பாலமுருகன் மற்றும் வேம்பு ஆகிய 14 நபர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விபத்துகளில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

sasikala

திமுக தலைமையிலான அரசு பெறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும், குடோன்களிலும்  தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்டு ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்ச்சியாக நடப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. திமுக தலைமையிலான அரசு பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை இந்த 29 மாத ஆட்சிக்காலத்தில் பட்டாசு ஆலைகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட வெடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 100க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பட்டாசு தொழிலாளர்களின் மீது எந்த அளவுக்கு இந்த ஆட்சியாளர்கள் அக்கறையோடு இருக்கிறார்கள் என்பது நன்கு விளங்கும்.

sasikala

பட்டாசு தொழிலை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள், குடோன்கள் மற்றும் பட்டாசுகளை சில்லறையாக விற்பனை செய்யும் இடங்களில் எல்லாம் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து, தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் வரும் காலங்களில் ஏற்படுவதை தடுக்க தேவையான உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைமையிலான அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.