பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம்: முதல்வர் தலைமையில் இன்று தொடக்கம்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் நடைபெறுகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் , கடலுார் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அறந்தாங்கி, காட்டுமன்னார்கோவில் ஆகிய ஆகிய பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இடம்பெறும் என கடந்த 2020ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலத்தில் துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, ஒருங்கிணைந்த எக்கு ஆலை உள்ளிட்ட ஆலைகள், மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் உள்ளடக்கிய இயற்கை வாயுக்களின் ஆய்வு போன்றவை துவங்க முடியாது என்று சட்டமும் நிறைவேற்றப்பட்டது .
மேலும், இச்சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 24 பேர் கொண்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், முக்கிய அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பிற்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், வேளாண் பாதுகாப்புக்கான கொள்கைகள், பாசனம் மற்றும் வெள்ள நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண்மை மற்றும் அவை சார்ந்த தொழிலகங்களை மேம்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையிலேயே தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.