2 மணிக்கு திறக்கப்படும் பூண்டி ஏரி... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அந்த நான்கு மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் நீர் நிரம்பியுள்ளது. நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. மிக முக்கியமாக சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஐந்து ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் 33.95 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உபரி நீர் படிப்படியாக திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. “பூண்டி ஏரியிலிருந்து மதியம் 2 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால்,ஏரி நீர் செல்லும் கொசஸ்தலை பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அறிவித்துள்ளது.