குற்றாக அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு : 2வது நாளாக குளிக்க தடை..

 
  குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்  சுற்றுலா பயணிகள் குளிக்க  2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  

குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் தாமதமாக ஜூன் இறுதியில் தான் தொடங்கியது.  இந்த நிலையில் கடந்த ஒரு தினங்களாக  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று மதியத்திற்கு மேல் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.  திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் , அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக போலீஸார் வெளியேற்றினர். இதனால் குளித்துக் கொண்டிருந்த  மற்றும் குளிக்க காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.  வெள்ளப்பெருக்கு குறைந்ததும் மீண்டும்  குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறையினர்  தெரிவித்திருந்தனர்.

கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு!

இதனையடுத்து இன்று அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.  இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து  2வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே  நேற்று மாலையில் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கும்,  புலியருவியிலும் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.