பிளாஸ்டிக் கவர்களில் சாப்பாடு.. போக்குவரத்துக் கழக பணிமனைகளில் தரமான உணவு வேண்டும் - தொழிலாளர்கள் கோரிக்கை..

 
அரசு போக்குவரத்து கழகம்


போக்குவரத்துக் கழக பணிமனைகளில் தரமான உணவு வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எம்.கனகராஜ் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “விரைவு போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் பணிமனை உணவகங்களில் தரமான உணவு வழங்கக் கோரி பல்வேறு நினைவூட்டல் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக தஞ்சாவூர் பணிமனையில் மிக மோசமான முறையில் உணவு வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் கவர்களில் சாதம் மற்றும் இதர உணவுபொருட்கள் கட்டிக் கொடுக்கப்படுகிறது.

Transport Workers

 ஏலம் எடுத்த நபர் உணவகத்தை நடத்தாமல் உள் ஏலம் விட்டு வேறொரு நபர் நடத்தும் அவலமும் நடைபெறுகிறது. பணிமனை உணவகத்தில் உணவு தயாரிக்காமல் வேறு இடங்களில் இருந்து தரமற்ற உணவைகொண்டு வந்து வைத்துவிட்டு செல்லும்நிலை தான் உள்ளது. நாகரிகமான சமூகத்தில் இப்படிப்பட்ட நடைமுறைகளை நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது. தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து பணிமனைகளிலும் பணிமனை வளாகத்திலேயே தரமான அரிசி உள்ளிட்ட இடுபொருட்களைக் கொண்டு உணவு தயாரித்து கொடுக்கவும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.