ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திமுகவில் இணைவார் - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!

 
jayakumar

ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு இடையே ஓ.பன்னீர்செல்வமும், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினின் மருமகனுமான சபரீசனை சந்தித்து பேசியதாக தெரிகிறது. சபரீசன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதிமுகவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டுவருவதாக எடப்பாடி பழனிசாமி அணி குற்றஞ்சாட்டிவரும் நிலையில், இந்த சந்திப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்- சபரீசன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பூனைக்குட்டி வெளியே வந்தது... சபரீசனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு..” எனக் குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில், இதுகுறித்து ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபரீசன் - ஓபிஎஸ் சந்திப்பின் மூலம், ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது. ஏற்கெனவே சட்டப்பேரவையில் கருணாநிதி மற்றும் ஸ்டாலினைப் பாராட்டி பேசினார். தற்போது பூனைக் குட்டி வெளியே வந்த கதையாக மக்களுக்கு சபரீசனுடனான சந்திப்பின் மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். விரைவில் திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுபவதிற்கில்லை. இவ்வாறு கூறினார்.