ரூ.3 கோடி மோசடி வழக்கு : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்..
ரூ.3 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளி வந்திருக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
ஆவின் உள்ளிட்ட அரசு துறை நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துரையினர் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த வழக்குகளில் கைதாவதைக் தடுக்க முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர், தலைமறைவாகியிருந்தார். 20 நாட்களுக்குப் பிறகு கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் வைத்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீன் கேட்டு அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட்டிருந்தது. பின்னர் மோசடி வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், வக்கீல் முத்துப்பாண்டி ஆகியோரிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த 2 வாரங்களாக விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் மோசடி வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜேந்திர பாலாஜிக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் இன்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி ஆஜரானார். அவரிடம் மோசடி வழக்குகள் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.