அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை வெட்டிக் கொலை செய்த கும்பல்!

 
murder

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் எம்.ஏ நகர் திலகர் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன். பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பார்த்திபன் திருவள்ளூர் அம்மா பேரவை இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.  பார்த்திபன் செம்மர கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் நடைபயிற்சி செல்வதற்காக காலை 6 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். 

murder

பாடியநல்லூர் கோவில் மைதானம் அருகே நடைபயிற்சி சென்று கொண்டிருந்த போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த பார்த்திபன் சம்பவம் இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உடனடியாக அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் பார்த்திபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.