விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு.. பிறகு ஏன் ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்?? - உச்சநீதிமன்றம் கேள்வி..
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் ஒத்துழைப்பு கொடுத்துள்ள நிலையில், எதற்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட புகாரில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெகன் மூர்த்தி மற்றும் இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறை ஏடிஜிபி ஜெயராம் ஆகியோ போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏடிஜிபி ஜெயராமுக்கு கடத்தலில் தொடர்பு இருப்பதாகவும், அவருடைய வாகனம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏடிஜிபி ஜெயராமை ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சீருடையில் ஆஜரான ஏடிஜிபி ஜெயராம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று முன்தினம்(ஜூன் 16) மாலை நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார். ஆள் கடத்தல், குற்றச்செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருத்தணியை அடுத்த திருவாலங்காடு டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து ஏடிஜிபி ஜெயராமிடம் 24 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன்பின்னர் அவர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தமிழ்நாடு காவல்துறையின் பரிந்துரையை ஏற்று ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், தன்னை கைது செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று (ஜூன் 18) நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அமர்வில் விசாராணைக்கு வந்தது.

அப்போது மூத்த காவல் அதிகாரியான ஏடிஜிபி ஜெயராம் , விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வங்கியுள்ள நிலையில் அவர் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? என்று கேள்வி எழுப்பினர். அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக் அரசின் உரிய விளக்கத்தை கேட்டு அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது குறித்து தெரிவிப்பதாக, அரசு வழக்கறிஞர் கூறினார். அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் நாளை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


