லாரி மோதி சிறுமி உயிரிழந்த விவகாரம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. ஏசி மீது துறைரீதியான நடவடிக்கை..

 
லாரி விபத்து லாரி விபத்து

 
பீக் ஹவர்ஸ் நேரத்தில் தண்ணீர் லாரி, பொது சாலையில் சென்றதை தடுக்க தவறிய காவல் அதிகாரிகள் மீது சென்னை காவல் ஆணையர் துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.  

 சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர்கள்  செந்தில்நாதன் - யாமினி தம்பதி.  இவர்களது மகள் சௌமியா(10) புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  யாமினியே தினமும்  தனது மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.  அந்தவகையில் நேற்று காலை வழக்கம்போல் இருசக்கர வானத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது,  பேப்பர் மில்ஸ் சாலை, வால்கிங்சர் சாலை சந்திப்பு அருகே வரும்போது  நிலை தடுமாறி யாமினியும்,  சிறுமி சௌமியாவும்  கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சிறுமி மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

லாரி மீது  பேருந்து மோதி விபத்து

பின்னர் இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து,  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,  பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் பொதுசாலையை பயன்படுத்த சென்னையில் தடை இருந்து வருகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிகள் அதிகமாக உள்ள அந்த சாலையில் கனரக வாகனம் எவ்வாறு வந்தது என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து தண்ணீர் லாரி பொது சாலையில் சென்றதை தடுக்க தவறிய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக செம்பியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலைமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  மேலும் புளியந்தோப்பு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.