அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் வருகிற 13ம் தேதி பிரசாரம்

 
GK Vasan

அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  தலைவர் ஜி.கே.வாசன் வருகிற 13-ந்தேதி பிரசாரம் செய்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. கடந்த 07ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், நேற்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.

thennarasu erode

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வருகிற 13-ந்தேதி பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 5 மணியளவில் வீரப்பன் சத்திரம் பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் ஜி.கே.வாசன் மொத்தம் 11 இடங்களுக்கு சென்று ஆதரவு திரட்டுகிறார். வெட்டுக்காட்டு வலசு, விவேகானந்தர் சாலை, நாராயண வலசு, அம்பேத்கர் நகர், நியூ டீச்சர்ஸ் காலனி, திருமால் நகர், கலெக்டர் அலுவலகம் அருகில் சம்பத் நகர், பெரிய வலசு, 4 ரோடு, அப்பன்நகர், கல்யாண விநாயகர் கோவில், இடையன்காட்டு வலசு, பன்னீர் செல்வம் பூங்கா பகுதி, பெரியார் நகர், காந்திஜி ரோடு, காளை மாடு சிலை பகுதி, பழனியப்பா வீதி உள்ளிட்ட இடங்களில் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொள்கிறார்.