2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. சவரன் மீண்டும் ரூ.75,000ஐ தாண்டியது..
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்கள், ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஈரான் போர் உள்ளிட்ட உலக நாடுகளில் நிகழும் அசாதாரண சூழல், டாலருக்கு நிகராண இந்தியா ரூபாயின் மதிப்பு ஆகியவை காரணமாக தங்கம் விலை அதிரடியாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. அதிலும் இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே மவுசு அதிகம் தான். உலகளவில் தங்கம் சிறந்த சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் அதன் விலை கணிசமாக ஏற்றம் கண்டு வருகிறது. அந்தவகையில் நேற்றையதினம்(ஆக5) தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,960க்கும் , ஒரு கிராம் ரூ.9,370க்கும் விற்பனையானது.

இந்நிலையில் 2வது நாளாக இன்றும் தங்கம் விலை சற்று ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040க்கும் , கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,380க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.75,000ஐ தாண்டியது இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்துகிறது. அதேநேரம் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.126க்கு விற்பனை செய்யப்படுகிறது.


