கூகுள் மேப் பரிதாபங்கள்- கடலுக்குள் பாய்ந்த கார்
கடலூர் அருகே கூகுள் மேப் போட்டு கடற்கரையோர பயணத்தில் சென்ற இளைஞர்களின் கார் கடலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை சேர்ந்த ஐந்து பேர் கடலூர் வழியாக பயணத்தை மேற்கொண்டார்கள். இந்த நிலையில இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடற்கரை ஓரமுள்ள சாலையை பயன்படுத்தி கூகுள் மேப் மூலமாக பயணம் செய்தனர். கடலூர் சொத்திகுப்பம் பகுதி அருகே இவர்கள் சென்றபோது அதிலிருந்த ஆண்கள் மது போதையில் இந்த காரினை கடற்கரை ஓரமாக மணலில் ஓட்டியுள்ளார்கள். 4 வீல் டிரைவ் கார் என்பதால் இந்த கார் மணலில் செல்லும் என்று இவர்கள் மணல் பரப்பு வழியாக சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்படுகிறது.
அந்தப் போட்டியில் போர் வீல் டிரைவ் கார் மணலில் மட்டுமல்ல, கடலிலும் செல்லும் என அவர்கள் கூற அதில் காரை ஓட்டிக்கொண்டு வந்தவர் திடீரென கடலுக்குள் காரை இறக்கினார். சிறிது தூரம் சென்ற கார் திடீரென கடலில் நின்று விட்டது. கடலில் தத்தளித்த இவர்களை அந்த பகுதியில் இருந்த மீனவர்கள் உடனடியாக இறங்கி ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் காலை காவல்துறை உதவியுடன் இவர்கள் பயணம் செய்த கார் டிராக்டர் மூலம் கட்டி இழுக்கப்பட்டது. போர் வீல் டிரைவ் காரினை கடலுக்குள் ஓட்டி விஷப்பரிட்சையில் ஈடுபட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


