டெல்டாவில் உரத்தட்டுப்பாடு - தமிழக அரசுக்கு தினகரன் வேண்டுகோள்!!
தமிழகம் முழுவதும் உரத்தட்டுப்பாடு இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். பயிர் சாகுபடி மற்றும் மழைப்பொழிவை கருத்தில் கொண்டு மானிய விலையில் உரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது . எந்தவித மாறுபாடும் இல்லாமல் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு குறித்து மாவட்டம் தோறும் ஆய்வு நடத்திட வேளாண் துறை துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் .
அதன்படி வேளாண் துறை துணை இயக்குனர் சோபா மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி வருகிறார். நேற்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை பகுதிகளில் தனியார் கடைகளில் ஆய்வு நடத்தினர் .விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்களுக்கும் கணிசமான அளவு ஒதுக்கவேண்டும் என்றும் ,அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச விலைக்கு மானிய வகைகளை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் உரத்தட்டுப்பாட்டைச் சரி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீரென உயர்ந்திருக்கும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையைக் குறைப்பதும் அவசியம். பயிர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் ஏற்பட்டிருக்கும் உரம் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு விவசாயிகளைக் கவலையடைய செய்திருக்கிறது. இந்தக் கவலையைப் போக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார்.