வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தகவல்..
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் தொடங்கும். இருந்தபோதிலும் அக்டோபர் மாதம் முழுவதுமே பரவலாக மழை பெய்யும். அதன்படியே தமிழகத்தில் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது. அதனுடன் தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும், அதேபோல் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு அதாவது அக்.15ம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனையொட்டி பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியார்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது, “வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பருவமழைக்கு முன்பாகவே அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியில் ஏற்பட்டது போல் மழை பாதிப்பு இம்முறை -ஏற்படாது. மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மழைக்காலத்தில் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை. தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் கண்காணிக்கப்படுகின்றன” இவ்வாறு தெரிவித்தார்.


