மீலாது நபி திருநாள் - சசிகலா வாழ்த்து!!
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு அருளிய போதனைகளை அனைவரும் பின்பற்றி நடந்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தரணி தழைக்க வந்த தன்னிகரற்ற நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளினை பெருமகிழ்வுடன் கொண்டாடும் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மீலாது நபி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
“எந்த ஒரு செயலிலும், உணர்ச்சி வசப்படாத சகிப்புத் தன்மையும், நிதானமும் சிறப்புக்குரியவை, மற்றவர்களின் தவறுகளைத் தேடி அலையாதீர்கள், ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள், சகோதரர்களாக வாழுங்கள், பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்” என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு அருளிய போதனைகளை அனைவரும் பின்பற்றி நடந்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம்.
நற்பண்புகளை போதித்தது மட்டுமல்லாமல், அதன்படி வாழ்ந்தும் காட்டிய இறை தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழும் இந்நன்னாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மீலாது நபி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். " என்று குறிப்பிட்டுள்ளார்.