குரூப் 2 பிற்பகல் தேர்வு : அரை மணி நேரம் தாமதமாக தொடங்கும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..
குரூப் 2 முதன்மை தேர்வு காலையில் தாமதமாக தொடங்கியதால் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற இருந்த தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான முதன்மை தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 5,446 பணியிடங்களுக்காக சுமார் 186 இடங்களில் இருக்கக்கூடிய 280 தேர்வு மையங்களில் 51,071 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 32 தேர்வு மையங்களில் 8,315 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த நிலையில் சென்னையில் துரைப்பாக்கம் உள்ளிட்ட சில தேர்வு மையங்களில் 9 .30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு பதிவு எண் மாறியிருந்ததால் தாமதமாக தொடங்கியது. காலையில் தேர்வு தாமதமாக தொடங்கியதால் பிற்பகல் தேர்வு நேரத்தை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக வினாத்தாட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த நிலைமை சரி செய்யப்பட்டு, தேர்வு அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கால தாமதத்தை ஈடு செய்யும் வகையில் மதிய தேர்வு 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை நடைபெறும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.