டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு... இனி 40 மார்க் கட்டாயம்! - அதிரடி மாற்றம்
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அரசு தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துகிறது. இதில் பணிகளுக்கேற்ப குரூப் 1, குரூப் 2 , குரூப் 4 என்ற பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் மீண்டும் தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஆனால் சில புதிய மாற்றங்களுடன் நடைபெறவிருக்கிறது. தமிழர்களுக்கு பணி கொடுக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் செய்வதாக அண்மையில் அரசு அறிவித்திருந்தது.
அதன்படி தமிழ் மொழித் தேர்வு தகுதித் தேர்வாக கொண்டுவரப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் விருப்ப மொழிப்பாடப் பிரிவு நீக்கப்பட்டு தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழி பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இனி இந்த தேர்வுகளில் முதல் பகுதியில் 100 வினாக்கள் தமிழ் மொழி சார்ந்த வினாக்கள் மட்டுமே இடம்பெறும். இந்த தமிழ் மொழி தகுதித் தேர்வில் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, அடுத்த பகுதியான பொது அறிவுப் பகுதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அதேபோல 40 மதிப்பெண்களுக்கு மேல் தமிழ் பிரிவில் எடுத்தால் அதுவும் மதிப்பிடப்படும். அதாவது மொத்த மதிப்பெண்கள் தமிழ் மொழி மற்றும் பொது அறிவு பகுதிகளில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படும். பொது அறிவுப் பகுதியில் 100 வினாக்களில் 75 பொது அறிவு வினாக்களும் , 25 திறனறி (Aptitude) வினாக்களும் இடம்பெறும். குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து எந்த புதிய அறிவிப்பும் இல்லாததால், தமிழ் பிரிவுக்கு பழைய பாடத்திட்டமே தொடரும் என தெரிகிறது.
குரூப் 4 தேர்வில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Surveyor), வரைவாளர் (Draftsman) ஆகிய 7 பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.