தியாகத்தைப் போற்றும் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் - ராமதாஸ்..!

 
Ramadoss

உலகம் முழுவதும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், " இறைவனுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கும் இஸ்லாமியர்களின் தியாகத்தைப் போற்றும் திருநாளான பக்ரித் திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியர்களின் ஐந்து புனிதக்கடமைகளில் ஒன்று மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகும். இக்கடமையின் ஓர் அங்கமாக ஹஜ் மாதம் 10ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடத்தி, அதன் முடிவில் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதை இஸ்லாமிய மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

bakrid

இதற்கான நடைமுறைகளில் பல பாடங்கள் அடங்கியுள்ளன. பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும். இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும். 

பக்ரித் திருநாள் சொல்லும் செய்தி தான் இன்று உலகம் முழுமைக்கும் தேவையான பாடமாக உள்ளது. அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்ற அந்த பாடத்தை அனைவரும் புரிந்து கொண்டால் உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது; மாறாக, எங்கும் அன்பு, சகோதரத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மட்டுமே தழைத்தோங்கும். அத்தகைய நிலை ஏற்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, உலகெங்கும் உள்ள நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என மீண்டும் வாழ்த்துகிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.