தியாகத் திருநாள் பக்ரீத் பெருநாள் வாழ்த்து - வைகோ..!
ஈதுல் அல்ஹா என்னும் ஈகையின் மாண்பினைக் கூறும் திருநாள்தான் பக்ரீத் பண்டிகை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனது முதிய வயதில் தனக்குப் பிறந்த ஒரே மகனான இஸ்மாயிலை, மூன்று முறை தனது கனவில் கண்டதை இறைவனின் கட்டளையாகக் கருதி நபி இப்ராகிம் (அலை) பலியிட முனைந்த தியாகம் இப்புவனம் எங்கும் நினைவு கூரப்படுகிறது. நரபலி அதனை நீக்கிட நல்லோர் கண்ட மார்க்கம்.
இஸ்லாமிய வரலாற்றின் தொடக்க கால திருப்புமுனைதான் இந்த நிகழ்ச்சி.
அகில உலக மக்களை ஆதியில் புனித மக்கா நகருக்கு வருமாறு நபி இப்ராகிம் அழைப்பு விடுத்தார்கள்.
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) ஒருமுறை, ‘புனித மக்கா நகரே நீ பரிசுத்தமான ஊர்; எனக்கு மிகவும் பிரியமான ஊர்.

எனது கூட்டத்தார் என்னை இங்கிருந்து வெளியேற்றவில்லை என்றால், உன்னைத் தவிர்த்து வேறு எங்கும் நான் குடியேறமாட்டேன்' என்றார்கள் (திர்மிதீ -மிஷ்காத்)
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) மதீனாவில் வாழ்ந்த பத்து ஆண்டுகளிலும் மக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.
‘தூய்மையான எண்ணத்தையும், சமுதாய ஒற்றுமையையும் உங்களின் நோக்கமாக கொள்ளுங்கள். இவை உங்களின் உள்ளங்களை தூய்மைப்படுத்தி வலிவும், பொலிவும் பெற்றவர்களாக விளங்கச் செய்யும். இங்கே வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்வீர்களாக' என்றார்கள்.
புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடிச் சென்று மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் வேளை. அங்கு செல்ல வாய்ப்பற்றோர் தத்தம் வசதிக்கேற்ப தத்தம் இல்லங்களில் தியாகத் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைக் கடந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உணர்வுடன் அரபா பெருவெளியில் மக்கள் கடலாக சங்கமித்து, இஸ்லாமிய மக்கள் வழிபாடுகளில் ஈடுபடும் இந்த நன்னாளில்,
இஸ்லாமியப் பெருமக்களுக்கு இதயமார்ந்த பக்ரீத் வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.


