பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்புக்கு உயர் நீதிமன்றம் தடை!

 
1 1

'கர்நாடகாவில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில், மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்' என, மாநில தொழிலாளர் நலத்துறை, கடந்த மாதம் 20ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
 

இந்த உத்தரவை எதிர்த்து, பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் 'மேனேஜ்மென்ட் ஆப் அவிராடா ஏ.எப்.எல்., கனெக்டிவிட்டி சிஸ்டம்ஸ் லிமிடெட்' உள்ளிட்ட அமைப்புகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
 

இந்த மனு நீதிபதி ஜோதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பு வக்கீல் பிரசாந்த் வாதிட்டதாவது: 18 முதல் 52 வயதுக்கு உட்பட்ட பெண் ஊழியர்களுக்கு, மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்குவதை தொழிலாளர் துறை கட்டாயமாக்கி உள்ளது.
 

தொழிற்சாலைகள் சட்டத்தின்படி, 20 நாட்கள் பணியாற்றினால் ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். இதுவே, ஆண்டுக்கு 18 நாட்களாகும். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆண்டுக்கு 12 உடல்நல பாதிப்பு விடுமுறை மற்றும் 18 நாட்கள் விடுமுறை அளிக்கிறது. இது தவிர, 12 சாதாரண விடுமுறையும் உள்ளன.எந்த மாநிலமோ அல்லது மத்திய அரசோ, மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற சட்டத்தை செயல் படுத்தவில்லை. அரசு எந்த அதிகாரத்தின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டது என்பதையும் அறிவிப்பில் குறிப்பிடவில்லை என வாதித்தனர் 

இதையடுத்து நீதிபதி ஜோதி, மாநில அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.மேலும் அரசு தரப்பு வாதங்களை கேட்க வேண்டி உள்ளதால், இன்று (10ம் தேதி) விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என் கூறினார்..