கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீடுக்கு நிதி ஒதுக்க ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் ஆணை

 
Highcourt Highcourt

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி சட்டத்திருத்தத்தை அமல்படுத்த அரசு முடிவு: இடைநிற்றல்  அதிகரிக்கும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு | இலவச ...

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.உடனடியாக மாணவர் சேர்க்கையை  தொடங்க  தமிழக  அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் 60 சதவீதம் தொகையை மத்திய அரசு 40 சதவீதம் தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும். மத்திய அரசு, கடந்த 2021ம் கல்வியாண்டு முதல் 2023ம் கல்வியாண்டு வரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்றும் 100  சதவீதம் தொகையை மாநில அரசு தான் வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

மாணவர்களின் கல்வி விஷயத்தில் அக்கறை கொண்டுள்ள மாநில அரசு, மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க மே 28ஆம் தேதி கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். மத்திய அரசு நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காததால் பள்ளிகள் பாதிக்கப்படுவார்கள் என நீதிபதிகள் குறிப்பிட்ட போது, இதே போல மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்ப வேண்டும் என கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார். அப்போது மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் பாபு, அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க  காலக் கெடு நீட்டிக்கப்படுமா?

என்ன காரணத்துக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என நீதிபதிகள் கேட்டபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன்,  மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்பி  கூட இல்லை என்பதால் ஒதுக்கவில்லை என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில் இந்த தீர்ப்பளித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் அமர்வு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். அந்த நிதியை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உரிய வகையில் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கைக்கான நிதியுடன் இதை தொடர்பு படுத்தக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்