‘ஆன்லைன் விளையாட்டுகளுக்கான அரசின் கட்டுப்பாடுகள் செல்லும்’ - ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மக்களின் நலனை பாதுகாப்பது அரசின் கடமை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது.

அதேசமயம், திறமைக்கான ஆன் லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த 2025 பிப்ரவரி 14ம் தேதி விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த விதிகளை எதிர்த்து தனியார் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்குகளில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு இன்று தீர்ப்பு வங்கியது. அதில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தி, நேரக்கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. மக்களின் நலனை பாதுகாப்பது அரசின் கடமை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவுட்டனர்.


