காங்கோவிலிருந்து ஆரணி வந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் அறிகுறி? - வெளியான ஷாக் தகவல்!
அங்கு சுற்றி இங்கு சுற்றி தற்போது ஒமைக்ரான் எனும் அதிவேக கொரோனா தமிழ்நாட்டிற்குள்ளும் நுழைந்துவிட்டது. இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடே பரபரப்பாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருந்தது. முதன்முறையாக தமிழ்நாட்டில் நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை நேற்றிரவு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிப்படுத்தினார்.
நைஜீரியாவில் இருந்து வங்கதேசத்தின் தோஹா வழியாக தமிழ்நாடு வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவருடன் தொடர்பிலிருந்த ஏழு பேருக்கும் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் மாதிரிகள் இன்னும் ஆய்வில் இருக்கின்றன. இதனால் விமான நிலையங்களில் தீவிரமாக பரிசோதனை செய்ய நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு துறை துரிதப்படுத்துயுள்ளது.
இச்சூழலில் காங்கோவிலிருந்து ஆரணி சென்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதாகவும், அவருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறிகள் தென்படுவதாகவும் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அவரது எஸ் ஜீன் மரபணு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளதால் ஒமைக்ரானா என கண்டறிய மாதிரிகள் பெங்களூருவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் தலைதூக்க ஆரம்பித்திருப்பதால், அறிகுறி இருந்தால் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு, முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.