கோவையில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்

 
puducherry helmet

இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கோவை மாநகர காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோவை மாநகரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.வருகிற 26-ந் தேதி முதல் காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் அதிகப்படியாக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

helmets


 
இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக ஆராய்ந்ததில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே 100 சதவீதம் விபத்துக்களை தடுக்கும் வகையில், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறையை 100 சதவீதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 26-ந் தேதி முதல் நகரில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு ஒருவார காலததுக்கு போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.