பொது இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்கள்- இறுதி கெடு விதித்த ஐகோர்ட்

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.
சென்னை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொது நல வழக்கில் ராயபுரம் பகுதியில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் கொடிக்கம்பத்தையும் கல்வெட்டையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் மற்றும் முகமதுசபீக் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும், தனி நீதிபதியின் உத்தரவை நீதிபதி நிஷாபானு தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு வரும் ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்படங்களை அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர். குறிப்பிட்ட தேதிக்குள் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.