பிலிப்பட்டி அரசுப் பள்ளிக்கு 2வது நாளாக விடுமுறை..
பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 4 பேர் புதன்கிழமை காவிரி ஆற்றில் முழ்கி பலியான நிலையில், இன்று இரண்டாவது நாளாக அந்தப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள பிலிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து கடந்த புதன்கிழமையன்று ( பிப்15) , மாணவிகள் சிலர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதிக்குச் சென்றுள்ளனர். போட்டி முடிந்து திரும்பிய மாணவிகளில் 4 பேர் மாயனூர் காவிரியாற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உடற்கூறாய்வுக்குப் பின்னர், கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு பிலிப்பட்டிக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு ஆகியோா் உயிரிழந்த மாணவிகளின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் மாணவிகளின் பெற்றோர்களிடம் அரசின் நிவாரண உதவித் தொகை தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தனா். நள்ளிரவிலும் ஏராளமான கிராம மக்கள் கண்ணீருடன் மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்ததினர். இந்நிலையில், உயிரிழந்த மாணவிகள் பயின்ற பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு இன்று ( வெளிக்கிழமை) இரண்டாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.