ஏழை மாணவர்களுக்கான விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்..!!
ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தனிநபர் ஆணையம் ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது. பள்ளிகளில் ஏற்படும் சாதிய மோதல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட இந்த ஆணையம், பல்வேறு பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது. அதில் முதலாவதாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் பெயர்களுக்கு முன்னும், பின்னும் இடம்பெற்றிருக்கும் சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்பதுதான். இதனை ஏற்று பள்ளியின் பெயர் மற்றும் தனிநபரின் பெயரில் சாதிப் பெயர் இருக்கக் கூடாது என்று அரசு அறிவித்தது.

இதேபோல், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு முழுவதும் 727 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 455 மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், 157 சீர்மரபினர் விடுதிகள், 20 சிறுபான்மையினர் நல விடுதிகள், ஆயிரத்து 332 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள், 48 பழங்குடியினர் விடுதிகள் என இரண்டாயிரத்து 739 விடுதிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 568 மாணவ, மாணவிகள் பயின்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடித்தட்டுக் குடும்பங்களை சார்ந்த இந்த மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் அதே வேளையில் எதிர்கால சமுதாயத்தை ஒரு சமத்துவ சமுதாயமாக உருவாக்கிட, சாதி சமய உணர்வுகளை களைவது இன்றியமையாதது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் ‘சமூகநீதி விடுதிகள்’ என்ற பொதுப் பெயரில் இனி அழைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


