அமைச்சர் சிவசங்கர்இன்னும் எத்தனை பேர் வாழ்வாதாரத்தைப் பறிக்க முடிவு செய்துள்ளார்?

 
annamalai mkstalin

 அரசுப் பேருந்துகள் நிறுத்திச் செல்வது தொடர்பாக ஒப்பந்தம்  நடைபெறாததால் நெடுஞ்சாலை உணவகம் நடத்துபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள உணவகங்களில், அரசுப் பேருந்துகள் நிறுத்திச் செல்வது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற வேண்டிய ஒப்பந்தம், இன்று வரையில் நடைபெறாமல் இருப்பதால், பெரும் முதலீடு செய்துள்ள நெடுஞ்சாலை உணவகம் நடத்துபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

bus

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும், அவரது உதவியாளர்களும், பல உணவக உரிமையாளர்களிடம் லஞ்சம் வசூலித்து, அவர்கள் உணவகங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்துவதற்கு வசதியாக, இந்த ஒப்பந்தங்களை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்று தெரிய வருகிறது. 

இதன் மூலம், இத்தனை ஆண்டுகளாக நெடுஞ்சாலைகளில் உணவகம் நடத்தி வந்தவர்களும், அதனைச் சார்ந்த தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தொடர்ந்து பலமுறை அமைச்சரையும், அதிகாரிகளையும் தொடர்பு கொண்டும், எந்த நடவடிக்கையும் இல்லாததால், ஒரு ஊடகவியலாளர் வாயிலாக, இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் உணவக உரிமையாளர்கள் எழுப்பியிருந்தனர்.


இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அந்த உணவகங்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளார். இரண்டு உணவகங்களின் உரிமங்கள் இது வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. 

லஞ்சம் வாங்கிய உதவியாளர்கள் மீதும், ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் தள்ளிப் போடும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்காமல், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, மக்கள் மத்தியில் பிரச்சினைகளைக் கொண்டு வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் அமைச்சரின் இந்த முடிவு, ‘அமைச்சர் உள்ளிட்டோர் தவறு செய்தால், கண்டும் காணாமல் இருக்க வேண்டும், அவற்றைப் பொதுவெளியில் சொன்னால், புகார் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் வாழ்வாதாரத்தைப் பறிப்போம்’ என்று, அனைவருக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே தெரிகிறது. 

ஏற்கனவே ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர், இன்னும் எத்தனை பேர் வாழ்வாதாரத்தைப் பறிக்க முடிவு செய்துள்ளார்? அதிகாரத் திமிரில் ஆடிய அமைச்சர்கள் பலர் இன்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்கள் என்பதை அமைச்சர் உணர்ந்தால் நலம்.என்று குறிப்பிட்டுள்ளார்.