"நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்" - அன்புமணி வலியுறுத்தல்!!
நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலத்தில் தமிழகப் பெண் உட்பட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஒருவர் தர்மபுரியை சேர்ந்த பத்மா என்பது தெரியவந்துள்ளது. நாகவல்லி அணை அருகே உள்ள எர்ரபட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கன் என்பவரின் மனைவி பத்மா நரபலி கொடுக்கப்பட்டுள்ளார். நரபலி கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட உடல் அழுகை நிலையில் இருப்பதால் அது பத்மாவா என்ன கண்டுபிடிக்க முடியாமல் போயிருந்தது. தற்போது பத்மாவின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊரான எர்ரபட்டி கிராமத்திற்கு கொண்டு வர வேண்டுமென அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கேரளத்தில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி நரபலி கொடுக்கப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணின் உடல் இதுவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. தாயை இழந்த அவரது பிள்ளைகள் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாததால் இரட்டை வேதனையில் தவிக்கின்றனர்!(1/3)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 15, 2022
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், " கேரளத்தில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி நரபலி கொடுக்கப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணின் உடல் இதுவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. தாயை இழந்த அவரது பிள்ளைகள் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாததால் இரட்டை வேதனையில் தவிக்கின்றனர்! கோட்டயம் அரசு மருத்துவமனையில் பத்மா உடல் வைக்கப்பட்டுள்ளது. உறவு முறையை உறுதி செய்ய அவரது மகன்களிடம் மரபணு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பிள்ளைகளிடம் உடல் ஒப்படைக்கப்படவில்லை. அதற்கான காரணத்தை தெரிவிக்க கேரள அரசு மறுக்கிறது! இறந்த முன்னோரின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து கண்ணியமாக வழியனுப்பி வைப்பது தமிழர்களின் வழக்கம். அதை நிறைவேற்ற உதவும் வகையில் பத்மாவின் உடலை அவரது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் எர்ரபட்டிக்கு கொண்டு வர தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.