'வடிவேலு குறித்து அவதூறு கூற மாட்டேன்' - நடிகர் சிங்கமுத்து
நடிகர் வடிவேலுவுக்கு எதிராக வழக்கு முடியும் வரை எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை என நடிகர் சிங்கமுத்து தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளார்.

சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும்படி, சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்த நீதிபதி, பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


