'மைக்கை பிடித்தால் வாய்க்கு வந்தது போல பேசக்கூடாது' - பொன்முடி வழக்கில் நீதிபதி கண்டனம்..
மைக்கை பிடிக்கும் அரசியல் தலைவர்கள் யோசித்து பேச வேண்டும் என முன்னாள அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். ஐகோர்ட் இந்த வழக்கிற்கு நீதிபதி வேல்முருகனை நியமித்தது. இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், ஆஜராகி, பொன்முடி தன் கருத்தை தெரிவிக்கவில்லை. முன்பு ஒரு காலத்தில் நடந்த சம்பவத்தையே நினைவு கூர்ந்தார். பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் படி, புகார்கள் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்தால் புகாரை காவல்துறையினர் முடித்து வைக்கலாம். இந்த வழக்கை பொறுத்தவரை முன்னாள் அமைச்சருக்கு எதிரான நூற்றுக்கும் மேற்பட்ட புகார்களை முடித்து வைக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, “காவல்துறை அதிகரிகளுக்கு தீர்ப்பு எழுந்தும் அதிகரத்தை யார் கொடுத்தது? ஆரம்பக்கட்ட விசாரணைக்கும், புலன் விசாரணைக்கு வித்தியாசம் உள்ளது. கத்தியால் குத்தினால் ரத்தம் வராது என்று சொன்னதால் , கத்தியால் குத்திக் காட்டினேன்.. துரதிருஷ்டவசமாக ரத்தம் வந்து செத்துவிட்டான் என்று யாராவது சொன்னால், அப்படியே விட்டு விடலாமா??
இது ஜனநாயக நாடு. சுமார் 146 கோடி மக்கள் வாழும் நாடு. அதனால் மைக்கை பிடித்தால் வாய்க்கு வந்தது போல பேசக்கூடாது. இதுபோல பேசும் நபர்களின் வாயை கட்டுப்படுத்த இந்த நீதிமன்றம் விரும்புகிறது. மனுதாரர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்களின் இதுபோன்ற பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதிகளும் அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும்.

ஒருவர் பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாடு அனைத்து குடிமக்களுக்குமானது. சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமானது அல்ல.
ஆரம்பகட்ட விசாரணை என்பது புகாரில் குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா, இல்லையா? என்பது குறித்து விசாரிப்பது தான். அதன்பிறகு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும்.
வேண்டாதவர்களுக்கு எதிராக புகார் வந்தால் அதில் முகாந்திரம் உள்ளதாக கூறும் நிலையில், ஆதரவாளர்கள் என்றால் முகாந்திரம் இல்லை என்று கூறுகிறீர்கள். ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுத முடியாது. மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து , பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இல்லாவிட்டால் அது தீவிரமாக கருதப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


