எப்போது சென்னை வந்தீங்க? இப்ப எத்தனை பங்களா உள்ளது?- நீதிமன்றத்தின் கேள்விக்கு இளையராஜா பதில்
தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரான இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் சாட்சியம் அளித்தார்.
தேவர் மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர் ஆடியோ இசை வெளியீட்டு நிறுவனம், தங்கள் அனுமதியின்றி இந்த படங்களின் பாடல்களை யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி 2010ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்த போது, 1997ம் ஆண்டு பாடல்கள் உரிமை வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் செய்த போது, யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களை பற்றி குறிப்பிடவில்லை என்றும், ஆடியோ ரிலீஸ் ஒப்பந்த மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி பி.இளங்கோ முன்பு இளையராஜா ஆஜரானார். அவரிடம் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். அதற்கு சாட்சி கூண்டில் ஏறி இளையராஜா பதிலளித்தார். அவரிடம் பாடல்களின் பதிப்புரிமை பற்றியும், தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாவும், சொத்து மதிப்புகள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்கபட்டன. குறுக்கு விசாரணையின் போது எத்தனை பங்களாக்கள் உள்ளது என்ற கேள்விக்கு இளையராஜா, எனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், சொத்து சுகம் என மற்ற பொருட்களை பற்றி எனக்கு தெரியாது என்றும் அதில் கவனம் செலுத்தினால் தனக்கு இசை வராது என்றும் தெரிவித்தார்.

பேர், புகழ் மற்றும் செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது உண்மையா? என்ற கேள்விக்கு,அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என பதிலளித்தார். சென்னைக்கு எப்போது வந்தீர்கள் என்ற கேள்விக்கு, 1968 ஆம் ஆண்டு வந்ததாகவும், இயக்குனர் பாரதிராஜா அறையில் தங்கி இருந்து வாய்ப்பு தேடியதாகவும்,பின்னர் சங்கிலி முருகன் அறிமுகம் பெற்றதாகவும் தெரிவித்தார். தனது மனைவிக்கு வேறு ஏதாவது தன்னிச்சையாக எந்த வருமானமும் இல்லை என்றும் அவர் எந்த தொழில் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். தயாரிப்பாளரிடம் நேரடியாக பணம் வாங்குவீர்களா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்தார். தனக்கு இசை மூலம் மட்டும் வருமானம் வேணடும், வேறு எந்த தொழிலும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.இளையராஜாவிடம் ஒரு மணி நேரம் நடந்த சாட்சி விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, நீதிபதி, மீண்டும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி உத்தரவிட்டார்.


