"எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான் " - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

 
tn

தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் 80ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்று இளையராஜாவை நேரில் சந்தித்து  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 

ilaiyaraja

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!

அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி!


அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர்.

இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக - உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன்.

எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து! " என்று பதிவிட்டுள்ளார்.