மனவேதனையில் இருக்கிறேன்... கோவையில் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

 
1 1

மதுரையில் நடந்த முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை நிகழ்வுக்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணித்துச் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடனும் இணைந்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்குவந்த சசிகலாவையும் அவர் சந்தித்தார்.இந்த நிகழ்வை அடுத்து, அதிமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி, அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

இதனையடுத்து, செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்பது குறித்தான பேச்சுகள் எழுந்தன.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக செங்கோட்டையன், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போகிறார் எனும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தச் சூழலில், இன்று கோவையில் இருந்து செங்கோட்டையன் சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னை வந்துள்ள செங்கோட்டையன், இன்று  (26ஆம் தேதி) தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து விஜயைச் சந்தித்து அவர் முன்னிலையில், தவெகவில் இணைய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 26 அல்லது 27 ஆகிய இரு தினங்களில் ஒரு நாள் செங்கோட்டையன் தவெகவில் இணைவார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (25ஆம் தேதி) மாலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில், ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து, இந்த இயக்கத்திற்காக உழைத்து எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பரிசு, அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூடாது என்பதே. அதிமுகவில் இருந்து நீக்கியது மனவேதனை தருகிறது. இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை” எனத் தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.