அவசர சிகிச்சை வாகனங்களின் தரத்தை மேம்படுத்தி உயிரிழப்பை தடுத்திடுவீர்! - வைகோ வேண்டுகோள்...
அவசர சிகிச்சை வாகனங்களின் தரத்தை மேம்படுத்தி உயிரிழப்புகளை தடுத்திட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளார் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ் நாட்டில் அண்மைக் காலமாக, அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு, கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் உயிர் காக்கும் நேரத்தை சாலையிலேயே கழிக்கும் அவலநிலை ஏற்படுகிறது. இதைப் போக்குவதற்கு சாலை விதிகளை சீரமைத்து, ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனியாக விரைவுப் பாதையை உருவாக்க வேண்டும்.
ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்லும் போது சம்மந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, போக்குவரத்தை சீர்செய்திட வேண்டும். கூடுதலாக ஆம்புலன்சிலிருந்து போக்குவரத்துக் காவல் துறையினரைத் தொடர்பு கொள்ளும் வகையில், ஆம்புலன்சில் வயர்லஸ் கருவி பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.