எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு- 29 மாதங்களாக நடவடிக்கை இல்லை என ஐகோர்ட் அதிருப்தி
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கில், இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பாக 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் வரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து ஜனவரி 6 ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி, தமிழக பொதுத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அதிகாரிகள், முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற்ற நிலையில், இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி பெறுவதற்கு ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது எனக் கேள்வி எழுப்பினார். இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கோரிய ஆவணங்கள் மீது, பொதுத்துறை செயலாளர் 29 மாதங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். தேர்தல்களின் போது, ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசியல் கட்சிகள் கூறிய நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என நீதிபதி வேதனை தெரிவித்தார்.
அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறாமல், வழக்கில் ஆதாரங்களை சேகரித்து என்ன பயன்? என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, இதன் காரணமாக வழக்கு விசாரணையை நீதிமன்றம் துவங்க முடியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். பின்னர், இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பாக, 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் வரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்கும்படி, தமிழக பொதுத்துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல, வழக்கு தொடர அனுமதி வழங்கக் கோரி ஆவணங்களை அனுப்பியதுடன் நின்று விடாமல், அதன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நினைவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என விளக்கமளிக்கும்படி, விஜிலன்ஸ் ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 6 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


