“தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்வு" - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ₹1,66,727 ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திட்டக்குழு துணை தலைவருடன் ஆலோசனை நடத்திய பிறகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் தனிநபர் வருமானம் சராசரி 798,374ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதை விட அதிகமாக ரூ.1,66,727ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய காலம் மாநில பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.
நிலைத்த நிலை பொருளாதாரத்தில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது;நடப்பாண்டின் நடப்பு விலையில் தமிழ்நாடு 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது; தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு 20.71 லட்சம் கோடியாக உள்ளது; நடப்பு விலையில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு 23.64 லட்சம் கோடி. விலைவாசி உயர்வில் இந்தியாவில் தமிழ்நாட்டின் மதிப்பு குறைவாக உள்ளது;கடந்த 2 ஆண்டுகளாக இருந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து தமிழ்நாடு அரசு மீண்டுள்ளது; மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 2022-23ல் 9.1%ஆக உள்ளது. நடப்பு விலையில் நாட்டின் 2ஆவது பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது; நிலைத்த விலை பொருளாதாரத்தில் நாட்டில் 3ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் நிலைத்த விலையில் 2021-22இல் 1,54,557 ஆகவும், 2022 -23இல் 1,66,727 ஆகவும் உள்ளது. 2011-12 ஆண்டு முதல் 2017 -18 வரை மாநில பொருளாதார வளர்ச்சி மிகுந்த ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது கொரோனா தொற்றுக்கு பிறகு வளர்ச்சி வேகம் பிடித்து கடந்த 2 ஆண்டுகளாக சராசரியாக 8% என்ற அளவில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்றார்.