ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு... 85 சதவீத மாடுகள் விற்பனையாகின!

 
erode cattle market

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் நேற்று மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில், சந்தைக்கு வரத்தான 85 சதவீதம் மாடுகள் விற்பனையாகின.

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாட்டு சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதி, நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கு வரத்தாகும் மாடுகளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வது வழக்கம்.

கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த மாட்டு சந்தை கடந்த செப்டம்பர் 2-ந் தேதி  முதல் அரசு பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் உடன் செயல்பட்டு வருகிறது. முதல் இரண்டு வாரம் மாடு வரத்து குறைவாகவே இருந்தது. மூன்றாவது வாரத்திலிருந்து மாடுகள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் அதே நேரம் கடந்த 4 வாரமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தமாக நடந்து வந்தது.இந்நிலையில், நேற்று கூடிய சந்தையில் மாடுகள் வரத்து அதிகரித்து காணப் பட்டன.

erode

பசு-400, எருமை-200, கன்று-50 என மொத்தம் 650 மாடுகள் வரத்தானது. மாடுகளை தென்மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும், ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநில வியாபாரிகளும் வந்து அவர்களுக்கு பிடித்த மாடுகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். பசுமாடு ரூ.30 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை விற்பனையானது. எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை விற்பனையானது. வளர்ப்புக் கன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த வாரம் வரத்தான மாடுகள் 85சதவீதம் விற்பனையானதாக மாட்டு சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.