"அரசு பணியாளர் ஒவ்வொருவரும் தங்களுடைய சொத்து மற்றும் கடன்..." : தமிழக அரசின் அதிரடி உத்தரவு !!
அரசு பணியாளர் ஒவ்வொருவரும் தங்களுடைய சொத்து மற்றும் கடன் குறித்த தகவல்களை உரிய காலத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு ,சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோரது ஓய்வு ஊதியம் பெறக்கூடிய வயது 58இல் இருந்து 60 ஆக உயர்வு,ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கத்தில் வைக்கும் நடைமுறை நீக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியானது.
குறிப்பாக ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்கள், தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறை தவிர்க்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் புகாருக்கு உள்ளாகும் ஊழியர்கள் பற்றிய விசாரணையை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தெரிவித்ததன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973, விதி 7 (3)-ன்படி, அரசு பணியாளர் ஒவ்வொருவரும் தங்களுடைய சொத்து மற்றும் கடன் குறித்த தகவல்களை உரிய காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மனிதவள மேலாண்மைத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மேற்கூறிய உத்தரவை சுட்டிக்காட்டியுள்ளார்.அதன்படி, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்களும் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.