இடைத்தேர்தல் - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிப்பார்ப்பு

 
Erode

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிப்பார்க்கும் பணி தொடங்கியது. 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. கடந்த 07ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், நேற்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 77 வேட்பாளர்கள் + நோட்டா என 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியது உள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படவுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிப்பார்க்கும் பணி தொடங்கியது. மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணன் உன்னி மேற்பார்வையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில், இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிப்பார்க்கப்பட்டு வருகின்றன.