கேரளா குண்டுவெடிப்பு - தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை உத்தரவு!
கேரளா குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் களமச்சேரி என்ற இடத்தில் ஜெபக்கூட்டம் நடைபெற்றிருக்கும்போது மூன்று வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் பங்கு கொண்ட இடத்தில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக 36 பேர் படுகாயம் அடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய டொமினிக் மார்ட்டின் கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் குண்டுவைத்ததாக மார்ட்டின் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், கேரளா குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக உளவுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள், ரயில்வே ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்புகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.