இடைத்தேர்தல் - மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்

 
Erode East

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் இன்று காலை தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

Erode

இந்த நிலையில் தேர்தலில் 77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 78 பெயர், சின்னங்கள் இடம் பெற வேண்டும் என்பதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தேர்தலுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்பட்டது. இதையடுத்து கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. இந்த பணி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.