சத்தமே இல்லாமல் சாதித்த இஸ்ரோ- 'ஸ்பேடெக்ஸ்' திட்டம் வெற்றி

 
s s

விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த 'ஸ்பேடெக்ஸ்' திட்டம் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்டத்தின் கீழ் விண்வெளியில்  விண்கலன்களை ஒன்றிணைக்கும் பரிசோதனையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது இஸ்ரோ. விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் விண்கலன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமையைத் தேடித்தந்திருக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

2 விண்கலன்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில் நுட்பத்தை அறிந்த 4வது நாடு என்கிற பெருமையை பெறுகிறது இந்தியா. ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக கடந்த டிச.30-ஆம் தேதி ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. ஜன.7ஆம் தேதி முதல்முறையாக டாக்கிங் செயல்முறை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. பின் ஜன.9ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.ஜன.9ஆம் தேதியும் சிறிய தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நிமிடத்தில் டாக்கிங் சோதனை முயற்சி கைவிடப்பட்டு, தரவுகள் ஆராயப்பட்டு வந்தன. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் டாக்கிங் செயல்முறையை 4வது முறையாக இன்று தொடங்கிய இஸ்ரோ அதில் வெற்றி கண்டு வரலாறு படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.