அதிமுக - திமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தது உண்மைதான் - தவெக நிர்வாகி அருண்ராஜ்..!

 
1

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனை, சென்னை மண்ணடியில் தவெக நிர்வாகி அருண் ராஜ் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்தார். ஆனால், ஆட்சியமைக்க ஆதரவு தருவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பேசி முடிவை கூறுவதாக காதர் மொய்தீன் தெரிவித்து விட்டார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அருண்ராஜ் கூறுகையில், தவெக தேர்தலில் வெற்றி பெறுவதை தடுக்க தேர்தலுக்கு முன்பிருந்தே திட்டமிட்ட சதி நடந்துள்ளது. அதையும் மீறிதான் தவெக வளர்ச்சி அடைந்துள்ளது."தமிழக ஆளுநர் அரசமைப்பு சட்டப்படி நடக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை ஆளுநர் பதவியேற்க அழைக்க வேண்டும். பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிப்பதுதான் நடைமுறை. தவெக ஆட்சியமைப்பதை தாமதிக்கச் செய்யவே முடியும்; ஆனால் தடுக்க முடியாது. நீதி கண்டிப்பாக வெல்லும்.ஆளுநர் சட்டப்படி தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களை பெற்ற தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அவர் காலதாமதம் செய்யலாமே தவிர சட்ட ரீதியாக மறுக்க முடியாது

தவெக ஆட்சியமைப்பதை தடுக்க, அதிமுகவும், திமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தது உண்மைதான். சிலர் அவர்களை தடுத்திருக்கலாம்.அந்த இரண்டு கட்சிகளுக்கும் வாக்களித்தவர்கள் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து பார்க்க வேண்டும். திமுகவுடன் நட்பு பாராட்டியதால் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து வெளியேற்றினர். ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி என்ன செய்து கொண்டிருக்கிறார்? மக்களின் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் அளவுக்கு இரு கட்சிகளும் செயல்படுகின்றன. அதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.