"ஜானகி அம்மையாரின் 100-வது பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்" - சசிகலா

 
sasikala

ஜானகி அம்மையாரின்  100-வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப்  போற்றி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சசிகலா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக சசிகலா தனது சமூகவலைத்தள பக்கத்தில், "பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான திருமதி வி.என்.ஜானகி அம்மையார் அவர்களின் 100-வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப்  போற்றி, அதனைக் கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

hh

திரைத்துறையில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ஜானகி அம்மையார் அவர்கள்  புரட்சித்தலைவரோடும் ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி உள்ளிட்ட படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கியபோது, ஜானகி அம்மையார் அவர்கள் தனது வருமானத்தில் சென்னை லாயிட்ஸ் சாலையில் வாங்கிய வீட்டை, புரட்சித்தலைவருக்கு கொடுத்ததையும், இந்த இடத்தில்தான், தற்போது, நம் கட்சியின் தலைமைக் கழகம் செயல்பட்டு வருகிறது என்பதையும், இந்நேரத்தில் பெருமையுடன் நினைத்து பார்க்கிறேன்.


புரட்சித்தலைவர் அவர்கள் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜானகி அம்மையார் அவர்கள், அதன்பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கரங்களை வலுப்படுத்தவும் கட்சி, சின்னம், தலைமை அலுவலகம் என அனைத்தையும் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் ஒப்படைத்த பெருமைக்குரியவர். கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டும், எதிர்க்கட்சியினருக்கு தமிழகத்தில் இடம் கொடுத்துவிட்டால், அது தமிழக மக்களை பெரிதும் பாதித்துவிடும் என்ற எண்ணத்திலும் புரட்சித்தலைவர் மறைவுக்கு பிறகு பல அணிகளாக பிரிந்து இருந்த நம் கட்சியினரை ஒன்றிணைத்து வலிமையான ஒரு பேரியக்கமாக கொண்டு வந்ததையும், அதற்காக நாம் மேற்கொண்ட முயற்சிகளையும் இன்றைக்கும் எண்ணிப் பார்க்கிறேன். இந்த காலகட்டங்களில், ஜானகி அம்மையார் அவர்களோடு பழகிய அந்த இனிமையான நாட்களை நினைத்து பெருமையடைகிறேன்.

புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள், புரட்சித்தலைவியின் வழிவந்த அன்புத் தொண்டர்கள் சார்பாகவும், அம்மையார் வி.என். ஜானகி அவர்களின் 100-வது பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில், அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டுமென, எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.