ஜவாஹிருல்லா கோரிக்கை - முதலமைச்சர் உறுதி

 
tn

மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை, விரும்பவுமில்லை. மாநில முதலமைச்சர்களே டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தும் அவலத்தைப் பார்க்கிறோம். நாம் இரண்டு பெரிய இயற்கை பெரிய இயற்கை பேரிடர்களைச் சந்தித்தோம். அதற்குக்கூட நிவாரணத் தொகை தரவில்லை. 30-06-2022 முதல் ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை நிறுத்தி விட்டார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்புத் திட்டங்களைத் தருவதில்லை. தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

tn
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். மெட்ரோ ரயில் வேண்டாம் என்று கூறி, மோனோ ரயிலுக்குக் கொடி பிடித்தவர்கள் இன்று மெட்ரோ ரயிலுக்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு உங்களது ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும், அதனைச் செயல்படுத்துவதற்குத் நீங்கள் ஆட்சியில் இருந்தவரை முனைப்புக் காட்டவில்லை. எங்களது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், பணி ஆணைகள் வழங்கப்பட்டன; ஒப்பந்தங்கள் அனைத்துப் மேற்கொள்ளப்பட்டன; அனைத்துப் பணிகளும் தொடங்கப்பட்டன. நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், பிரதமரைச் சந்திக்கும் போதெல்லாம் மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை வைக்கிறேன். ஆறு நாட்களுக்கு முன்பு கூட பிரதமருக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். இதற்கான ஒன்றிய அரசின் நிதியை இதுவரை தராததால், இந்த முழுத்தொகையையும் மாநில அரசின் நிதியில் இருந்தும், மாநில அரசு வாங்கும் கடனிலிருந்து மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருந்தபோது பேசாமல் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இப்போதாவது பேசுகிறாரே என்ற அளவில் ஆறுதல் தருகிறது. இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எங்களுடன் இணைந்து ஒன்றிய அரசிடம் நிதி பெற குரல் கொடுக்க வேண்டும் என தங்கள் வாயிலாகக் நான் கேட்டுக் கொள்கிறேன்.


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதேபோல், நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின்கீழ் அரசாணை வெளியிடப்பட்டதா? நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதா? என்ற விவரங்களை கேட்டிருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது தொகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் அனுப்பி வைக்குமாறு, நான் கடந்த 22-08-2022 அன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டேன். அதனடிப்படையில் பெறப்பட்ட பணிகள் 07-10-2023 அன்று எனது தலைமையில் நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது.
நடப்பாண்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 797 பணிகள், 11 ஆயிரத்து 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டு, அதில் 582 பணிகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றில் 63 பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் உள்ள பணிகளுக்கு உரிய ஆணைகள் வழங்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

tn
மாண்புமிகு இத்திட்டத்தின்கீழ் ஐந்து கோரிக்கைகள் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் அளித்திருக்கக்கூடிய அவர் தொகுதியின் தொகுதியின் கோரிக்கைகளில், நடப்பாண்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் மூன்றுக்கு உரிய ஆணைகள் வெளியிடப்பட்டு அதில் ஒரு பணி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இரண்டு பணிகளுக்கு அரசாணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த அரசு "சொல்வதைத்தான் செய்யும், செய்வதைத்தான் சொல்லும்" என்பதனை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் முனைவர் ஜவாஹிருல்லா அவர்கள் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோருக்கான மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இந்த இந்த முரண்பாட்டை உடனடியாகக் களைய வேண்டும் என ஒரு நீண்டகால கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களையும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன்களை என்றென்றும் பாதுகாத்து வரும் இந்த அரசு பேராசிரியர் திரு. ஜவாஹிருல்லா அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, ஆவன செய்யப்படும் என்பதையும் மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த பதிலுரையில் முக்கியமான ஒரு அறிவிப்பையும் இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2001-ஆம் ஆண்டிற்கு முன் பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட ஏறத்தாழ 2 இலட்சத்து 50 ஆயிரம் வீடுகளை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழுதுபார்க்கவும், புனரமைக்கவும் 2,000 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 2 நாட்களில் மொத்தம் 15 உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது 8 உறுப்பினர்கள் 68 திருத்தங்களை அளித்துள்ளனர். இந்த அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள். தங்கள் தொகுதிக்கான கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். அவை உரிய அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. உங்களது ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, உங்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உறுதியாக நிறைவேற்றித் தரும். எனவே, இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு தங்களது திருத்தங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன். "வாழ்க தமிழ்! வெல்க தமிழ்நாடு!"