அமைச்சர் பொன்முடி வழக்கில் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்
திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கனிமவளத் துறையும் கவனித்து வந்த நிலையில், செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் எட்டு பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கானது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சியங்களாக 67 பேர் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் இருவர் மட்டுமே முறையான சாட்சியங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 8ம் தேதி மனுத்தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என நீதிபதி கூறிய நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் ஆஜராகியுள்ளார்.