திமுகவுக்கு இரட்டை நாக்கு; முரசொலியை திமுக காரர்களே படிப்பத்தில்லை- ஜெயக்குமார் நக்கல்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக- பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,ஜெயக்குமார்,அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், பாஜக சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை,தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்,தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னாள் மாநில தலைவர் சி. பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவுடன் பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. எந்த எந்த இடங்களை வழங்குவது குறித்து தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும், என்ன வேண்டுமானாலும் அவர்கள் கேட்கலாம் ஆனால் கட்சி நலம் பார்த்து முடிவெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. ஆர்பிஐ அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை அளிக்காமல் இருந்தது கண்டிக்கத்தக்கது. ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்டு உள்ளனர். திமுகவுக்கு இரட்டை நாக்கு, அவர்களுக்கு ஏற்றது போல் ஆளுநர் ஒத்துவராவிட்டால் பச்சோந்தி போல் விமர்சனம் செய்வார்கள்.முரசொலியை திமுக காரர்களே படிக்கமாட்டார்கள் என்று கருணாநிதியே சொல்லியிருக்கிறார்” என விமர்சித்தார்.